பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே,
உறைவிடம் என்பது ஒன்றேஎன!
உரைத்து வாழ்ந்தோம்...
உழைத்து வாழ்வோம்...
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்,
நம் மொழியே நம் பொன் மொழியாம்!
போரை புறம் தள்ளி,
பொருளைப் பொதுவாக்கவே!
அமைதி வழி காட்டும் அன்பு மொழி,
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
செம்மொழியான தமிழ் மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே,
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்!
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்,
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு!
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்,
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்!
செமொழியான தமிழ் மொழியாம்!
கம்ப நாட்டாழ்வாரும்,
கவியரசி அவ்வை நல்லாளும்,
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற,
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்!
புத்தாடை அனைத்துக்கும்,
வித்தாக விளங்கும் மொழி!
செமொழியான தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை,
அழகாக்க வகுத்தளித்து!
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி,
ஓதிவளரும் உயிரான உலக மொழி!
நம்மொழி நம்மொழி,
அதுவே...
செம்மொழியான தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே...
தமிழ் வாழிய வாழியவே...!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment